ராஞ்சி: கரோனா எதிரொலியாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கைக் காரணம் காட்டி, சாராயம் விற்க மறுத்த பெண் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 539 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பத்து பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கைக் காரணம் காட்டி, சாராயம் விற்க மறுத்த பெண் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ராஞ்சி மாநிலம் கும்லா மாவட்டம் சுர்சங் பகுதியில் புதன் காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு வசிக்கும் சரோ தேவி என்னும் பெண் நாட்டுச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.
அவரிடம் புதன் காலை சிலர் வந்து சாராயம் தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் ஊரடங்கைக் காரணம் காட்டி அவர் அதை மறுத்துள்ளார். இதன் காரணமாக் ஆத்திரமுற்ற அவர்கள் அவருடன் வாக்குவாதம் செய்து முடிவில், சரோவின் தலையில் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.