நாடு முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒரு நபர் 135 கிமீ தூரம் நடந்து சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.
இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 130யைத் தாண்டியுள்ளது. இதனால் அங்கு அனைத்து போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சந்த்ரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான வாலிபர் ஒருவர் நாக்பூரில் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது வேலை இல்லாததால் ஊருக்குச் செல்ல முற்பட்டுள்ளார். ஆனால், போக்குவரத்து இல்லாததால் அவர் சுமார் 135 கிலோமீட்டர் நடந்தே சென்றுள்ளார். இந்த சமயத்தில் அவர் சாப்பிடுவதற்கு கூட எதுவும் கிடைக்கவில்லை. இந்த செய்தி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.