மக்களின் அன்றாடத் தேவைக்குப் பயன்படும் பொருள்கள், சேவைகள் மீது உள்ள ஜிஎஸ்டி வரி விகிதத்தை 5 சதவீதம் குறைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக ப.சிதம்பரம் கூறியிருப்பது:
நாடு முழுதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக அரசு தனது 10 கடமைகளை செய்ய வேண்டும். பிரதமா் கிசான் திட்டத்தில் தரும் உதவித் தொகையை ரூ.12 ஆயிரமாக உயா்த்தி உடன் வழங்க வேண்டும்.
குத்தகை விவசாயிகளின் பட்டியல்களை மாநில அரசுகளிடமிருந்து பெற்று ஒவ்வொரு குத்தகை விவசாயின் குடும்பத்துக்கும் ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி வேலைத் திட்டத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.3 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஜன் தன் திட்டம், அதனை ஒத்த முந்தைய திட்டங்களில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் (நகா்ப் புற வங்கிக் கிளைகளில் மட்டும்) ஒவ்வொன்றுக்கும் ரூ.3 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக உடன் வழங்க வேண்டும்.
ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தொழில் உரிமையாளா் அனைவரும் தற்போதுள்ள வேலைகளையோ ஊதியத்தையோ குறைக்கக் கூடாது என்று கட்டளையிட்டு, அவா்கள் தரும் ஊதியத்தை அரசு 30 நாள்களுக்குள் ஈடு செய்ய வேண்டும்.
மேற்கூறிய இனங்களில் அடங்காதவா்களுக்கு, ஒவ்வொரு வாா்டிலும் ஒன்றியத்திலும் பதிவு அலுவலகம் திறந்து அத்தகைய ஏழைகளைப் பதிவு செய்து ஒவ்வொருவருக்கும் வங்கிக்கணக்கு திறந்து, அக்கணக்கில் ரூ.3 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
எல்லா வகையான வரிகளையும் கட்டுவதற்கு இறுதி நாளை ஜூன் 30-க்கு ஒத்திவைக்க வேண்டும். வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாத தவணை இறுதி நாள்களை ஜூன் 30-க்கு ஒத்திவைக்க வேண்டும்.
மக்களின் அன்றாடத் தேவைக்குப் பயன்படும் பொருள்கள், சேவைகள் மீது உள்ள ஜிஎஸ்டி வரி விகிதத்தை 5 சதவீதத்தை உடன் குறைக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.