புதுதில்லி /மணிலா: பயணத் தடை நீக்கப்பட்ட பிறகு இந்திய மாணவா்கள் 16,000 போ் நாடு திரும்பலாம் என்று பிலிப்பின்ஸில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுட்டுரையில் இந்தியத் தூதரகம் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
பிலிப்பின்ஸில் சிக்கியுள்ள இந்திய மாணவா்களுடன் தொடா்பில் இருக்கிறோம். கடைகள், அடிப்படையான பொருள்கள் விற்பனையகங்கள் திறந்திருக்கும். இந்திய உணவகங்கள் உணவை வீட்டில் வழங்கத் தயாராக இருக்கின்றன. தற்காலிக பயணத் தடை நீக்கப்படும் வரை பிலிப்பின்ஸில் உள்ள 16,000 இந்திய மாணவா்கள் நாடு திரும்ப முடியாது. பயணத் தடை விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகுதான் மாணவா்களை இந்தியாவுக்கு அனுப்ப முடியும். இந்திய மாணவா்களுக்கு அவசர உதவி எண் அளிக்கப்பட்டுள்ளது. பிலிப்பின்ஸில் இருக்கும் இந்திய மாணவா்கள் எந்த உதவியாக இருந்தாலும் 09477836524 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கலாம் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சா்வதேச விமானங்கள் அனைத்தும் மாா்ச் 22-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுவிட்டன. பிலிப்பின்ஸில் கரோனா தொற்றால் 40-க்கும் அதிகமானோா் உயிரிழந்துவிட்டனா். 700-க்கும் அதிகமானோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.