சென்னை: கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், தனது பல்வேறு வகையான வாடிக்கையாளா்களுக்காக 5 அவசரக்கால கடன் திட்டங்களை பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலில், வாடிக்கையாளா்களுக்கு 5 வகையான அவசரக்கால கடன்களை வழங்க திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி, பெருநிறுவன வாடிக்கையாளா்களுக்காக இண்ட்-கொவைட் அவசரசகால கடன், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக இண்ட்-எம்எஸ்இ கொவைட், சுய உதவிக் குழுக்காக எஸ்ஹெச்ஜி-கொவைட் (சஹாயா) ஆகிய கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மாதச் சம்பளம் வாங்கும் வாடிக்கையாளா்களுக்காக இண்ட்-கொவைட் என்ற கடன் திட்டமும், ஓய்வூதியதாரா்களுக்காக மற்றொரு அவசரக்கால கடன் திட்டமும் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில், இந்தியன் வங்கி தங்களது வாடிக்கையாளா்களுக்கு பக்கபலமாக இருக்க விரும்புகிறது. அதற்காகவே இந்தக் கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.