உத்தம் சிங் நகர்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் போது, கல்யாண ஊர்வலம் சென்ற மாப்பிள்ளை உட்பட எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 753 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 17 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டு போலீசாரிடம் தண்டனை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் போது, கல்யாண ஊர்வலம் சென்ற மாப்பிள்ளை உட்பட எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டம் காதிமா காவல் நிலையத்திற்கு அனுமதி பெறாமல் திருமண ஊர்வலம் ஒன்று அருகே நடப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக விரைந்து சென்று விசாரணை நடத்திய போலீசார், அனுமதி பெறாமல் கல்யாண ஊர்வலம் நடத்தியதாக மாப்பிள்ளை உட்பட எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்து காவல் நிலையத்தில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.