திருச்சூர்: கரோனா ஊரடங்கின் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் கேரளாவில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 753 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 17 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக கேரளாவில் புதன்கிழமை முதல் மாநிலம் முழுவதும் சில்லறை மதுக்கடைகள் மூடபட்டுள்ளன.
இந்நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் கேரளாவில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சனோஜ். திருமணமாகாத இளைஞரான அவர் மதுக்கடைகள் மூடுவது பற்றிய அறிவிப்பு வந்ததில் இருந்து இரண்டு நாட்கள் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், வெள்ளியன்று காலை அவரது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டதாகவும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர், இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேசமயம் மாநில கலால் துறையின் சார்பில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் போதை மீட்டெடுப்பு மையங்களும், ஆலோசனை அறைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கபப்ட்டுள்ளது