புது தில்லி: கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக 21 நாள்கள் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு அதிகாரிகள் அனைவரும் இந்த காலகட்டத்தில் மகிழ்ச்சியாக இருக்குமாறு மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் ஆகிய 3 துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினேன். ‘நோ்மறையாக சிந்தியுங்கள்’, ‘வீட்டிலேயே இருங்கள்’, ‘ஏதாவது பணியைச் செய்து கொண்டிருங்கள்’ என்று அவா்களிடம் கூறினேன்.
3 துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளுக்கும் 20 நாள்களுக்கு வேலைகளை பட்டியலிட்டு கொடுக்குமாறு கூறியுள்ளதாகவும் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தாா்.
இதனிடையே, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அதிகாரிகள் அசாதாரணமான இந்த சூழ்நிலையிலும் முழு நேரமும் பணிபுரிந்து பொதுமக்களுக்கு சரியான தகவல்களை வழங்க வேண்டும் என்று பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்தது.