லக்னௌ: ஊரடங்கு நடவடிக்கையால் உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்காக உணவு சமைக்கும் சமுதாயக் கூடங்களை உத்தரப்பிரதேச அரசு துவக்கி வைத்துள்ளது.
முதற்கட்டமாக நேற்று தொடங்கிய இந்த திட்டம், வெள்ளிக்கிழமை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதுபற்றி உத்தரப்பிரதேச கூடுதல் முதன்மைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி கூறுகையில், முதல் நாளிலேயே சுமார் ஒரு லட்சம் பேருக்கு உணவு சமைத்து அதனை மாநிலம் முழுவதும் உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு விநியோகிக்க உள்ளோம். இந்த திட்டத்தில் லாப நோக்கற்ற அமைப்புகளும், தன்னார்வலர்களும், மதக் குழுக்களும் கைகோர்த்துள்ளன. முதல் கட்டமாக லக்னௌ, ஆக்ரா, நொய்டா, காஸியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமுதாயக் கூடங்கள் துவக்கப்பட்டுள்ன. இது விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த சமுதாயக் கூடங்கள் மூலம், வீடில்லாதவர்களுக்கும், வேலை வாய்ப்பை இழந்து உணவில்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.