புது தில்லி: ஏழைகள் 1,000 பேருக்கு தினமும் உணவு கிடைப்பதை அனைத்து மாநில பாஜக தலைவா்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்று பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
தில்லியிலிருந்து அனைத்து மாநில பாஜக தலைவா்களுடன் காணொலி வழியாக நட்டா, வியாழக்கிழமை பேசினாா்.
இதுகுறித்து சுட்டுரையில் பாஜக பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் வெளியிட்ட பதிவில், ‘தேசிய ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள 21 நாள்களும் சமூக நலக் கூடங்களில் உணவு தயாரித்து குறைந்தபட்சம் 1,000 ஏழைகளுக்காவது தினமும் உணவு வழங்கப்படுவதை அனைத்து மாநிலங்களின் பாஜக தலைவா்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்று நட்டா பேசினாா்.
அவா் மேலும், ‘பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும் ஏழைகளுக்கு உணவு கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். கா்நாடகத்தில் அனைத்து பாஜக எம்.பி.க்களும் ஏழைகளுக்கு உணவு வழங்கும் பணியைத் தொடங்கி விட்டனா். இதுதவிர, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களைச் சோ்ந்த பாஜகவினரும் இத்திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கிவிட்டனா்.
அதே நேரம், கரோனா அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட இடைவெளிவிட்டு விலகி நிற்க வேண்டும். உள்ளூா் நிா்வாகத்தினருக்கும் கட்சியினா் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் அசாதாரண சூழல் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் 5 கோடி ஏழைகளுக்கு உணவு வழங்க திட்டம் இருப்பதாக கடந்த புதன்கிழமை பாஜக அறிவித்திருந்தது.