நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவரை ஆந்திர போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரசவ வலி ஏற்பட்ட ஒரு பெண்ணை ஆந்திர மாநில போலீஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விஜயவாடா பவானி புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 25 வயது பெண் ஷேக் சித்திகா என்பவர் இன்று காலை பிரசவ வலியால் அவதிப்பட்டார். உடனடியாக அவரது குடும்பத்தினர் ஆட்டோ அல்லது கால்டாக்சி ஏற்பாடு செய்ய முயன்றனர். ஆனால் அது பலனளிக்காத சூழ்நிலையில் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக ஆந்திர போலீஸார் அவ்விடத்திற்கு விரைந்து வந்து போலீஸாரின் வாகனத்தில் அந்த பெண்ணை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது