கரோனா பாதிப்பு நிவாரணத்திற்காக எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் நிலையில், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா பாதிப்பு நிவாரணத்திற்காக சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு அனைத்து எம்.பி.க்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்று அனைத்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு உதவுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வைரஸ் தொற்று எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் ஏழை மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த நிதி பயன்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வெங்கையா நாயுடு தனது ஒரு மாத ஊதியத்தை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.