புது தில்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவுவது இதுவரை உள்வட்டப் பரவலாகவே இருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,100ஐ எட்டிவிட்ட நிலையில், கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் கரோனா பரவல் என்பது உள்வட்டப் பரவலாகவே உள்ளது. அனைவருமே சமூக இடைவெளியை நிச்சயம் பின்பற்ற வேண்டும். ஒருவரது அஜாக்ரதை கூட, கரோனா வைரஸ் இந்தியாவில் பெருந்தொற்றாக மாற வாய்ப்பு ஏற்பட்டுவிடும். தொழில்நுட்ப ரீதியாகக் கூறுவது என்றால், இந்தியாவில் இதுவரை கரோனா உள்வட்டப் பரவல் எனும் நிலையில் உள்ளது. அதிர்ஷ்டவசமாக இது சமூக தொற்றாக மாறவில்லை என்று மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பொதுமுக்கள் மீது உத்தரப்பிரதேசத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்திருக்கும் மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம், சில ஊழியர்கள், தூய்மைப்படுத்தும் பணியை அறியாமைக் காரணமாக மிகத் தவறாகக் கையாண்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்து வந்த தொழிலாளர்களின் உணவு, தங்குமிட வசதிகளை உறுதி செய்யுமாறு மாநில மற்றும் யூனியன்பிரதேச அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.