24 மணி நேரத்தில் 227 பேருக்கு பாதிப்பு, 3 பேர் பலி: மத்திய அரசு
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 227 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய அரசு செவ்வாய்கிழமை தெரிவித்தது.
மத்திய நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் லாவ் அகர்வால் செவ்வாய்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
"கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 227 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை 1,251 ஆகவும், பலியானாரின் எண்ணிக்கை 32 ஆகவும் உள்ளது. பலியான 3 பேரும் குஜராத், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
அலுவலர்களிடம் தாமதமாகத் தெரிவித்ததுதான், பாதித்தோரின் எண்ணிக்கையின் திடீர் அதிகரிப்புக்குக் காரணம். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, புதிதாக பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்" என்றார்.