ஊரடங்கை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு வகுத்துள்ள திட்டம் என்ன என்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு நிலவரம் குறித்து காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தினார். காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்,
"விரிவான நிதி ஒதுக்கீடு இல்லாமல் மாநிலங்களும் நாடும் எவ்வாறு இயங்கும்? ரூ.10,000 கோடி வருவாயை இழந்துள்ளோம். பிரதமரிடம் நிதி ஒதுக்கக்கோரி மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மத்திய அரசிடமிருந்து இதுவரை எவ்வித அறிவிப்பும் இல்லை." என்றார்.
சோனியா காந்தி பேசுகையில், "மே 17-க்குப் பிறகு என்னவாகும்? மே 17-க்குப் பிறகு எப்படி இருக்கும்? இந்த ஊரடங்கு எத்தனை நாள்கள் நீடிக்கும் என்பதை இந்திய அரசு எதன் அடிப்படையில் தீர்மானிக்கவுள்ளது." என்றார்.
இதைத் தொடர்ந்து மன்மோகன் சிங் பேசுகையில், "சோனியா காந்தி தெரிவித்ததுபோல், ஊரடங்குக்குப் பிறகு என்ன நடக்கும்?" என்றார்.
ராகுல் காந்தி பேசுகையில், "கரோனா தொற்றுக்கு எதிரான போரில் முதியவர்களையும், ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பதே பிரதானமாக இருக்க வேண்டும்" என்றார்.