பெங்களூரு: பெங்களூரு அருகே மகடி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமத்தில், உறங்கிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை தூக்கிச் சென்ற சிறுத்தை, அவனைக் கடித்துத் தின்றது. குழந்தையைக் காணமல் தேடிய பெற்றோர், பாதி உடலை கண்டெடுத்துள்ளனர்.
கடாரயானபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இது பற்றி கூறுகையில், கடும் வெயில் தகிப்பதால் இரவில் காற்று வராததால் அந்த கிராமத்தைச் சேர்ந்த பலரும் வீட்டின் கதவை திறந்து வைத்தே உறங்குவது வழக்கம்.
அதுபோல நேற்று நள்ளிரவு சிறுவனின் பெற்றோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, சிறுவனை தூக்கிச் சென்றுள்ளது.
திடீரென பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை காணாத பெற்றோர், அக்கம் பக்கத்தில் குழந்தையைத் தேடினர். இந்த நிலையில்தான் வீட்டில் இருந்து சுமார் 60 மீட்டர் தூரத்தில் சிறுத்தை பாதி கடித்துத் தின்ற நிலையில், குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் அவ்வப்போது வன விலங்குகள் - மனிதர்கள் இடையே மோதல் நடப்பது வழக்கமான சம்பவமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.