பெங்களூரு: மாற்றியமைக்கப்பட்ட அரசுப்பேருந்துகளை நடமாடும் கரோனா சோதனை நிலையங்களாக பயன்படுத்தும் திட்டத்தினை கர்நாடகா முதல்வர் எடியூரப்பா செவ்வாயன்று துவக்கி வைத்தார்.
கர்நாடக மாநில அரசுப் பேருந்துக் கழகத்தைச் சேர்ந்த ஐந்து பேருந்துகள், அம்மாநில பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் முயற்சியினால், கரோனா தொற்றினைக் கண்டறிய வழிசெய்யும் காய்ச்சல் சோதனைக் கூடங்களாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. . அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட பேருந்துகளின் பயன்பாட்டினை மாநில முதல்வர் எடியூரப்பா செவ்வாயன்று துவக்கி வைத்தார்.
இந்தப் பேருந்துகளில் காய்ச்சல் சோதனை செய்யும் வசதியுடன், ரத்தம் மற்றும் புரதச் சத்து சோதனைகளையும் ஒரே சமயத்தில் செய்ய இயலும். இந்த பேருந்தில் ஒரு மருத்துவர், மூன்று செவிலியர்கள் மற்றும் ஒரு ஆய்வக ஊழியரும் இருப்பார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு தன்னார்வலர்களும் அதில் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது.
ஐந்து பேருந்துகளில் ஒன்று மாநில காவல்துறை ஆணையர் வசம் ஒப்படைக்கப்பட்டு காவல்துறையினர் சோதனை செய்து கொள்வதற்கு பயனபடுத்தப்படும்.
மீதமுள்ள நான்கு பேருந்துகள் மாநிலத்தில் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் சிவப்பு மண்டலங்களில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.