ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கான சிறப்பு ரயில் சேவை இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கியது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 25 முதல் நாடு முழுவதும் 3 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 3-ஆம் கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை தளர்த்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக மே 12 (இன்று) முதல் 15 ரயில்கள் (எதிர் தடத்தில் 15 ரயில்கள்) இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. இதில் 45,533 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில், இன்று ரயில் சேவை தொடங்கியது. இன்று மட்டும் ஹவுரா - புது தில்லி, ராஜேந்திர நகர் புது தில்லி, புது தில்லி - திப்ருகார், பெங்களூரு - புது தில்லி, புது தில்லி - பெங்களூரு, புது தில்லி - பிலாஸ்பூர், மும்பை செண்ட்ரல் - புது தில்லி, அகமதாபாத் - புது தில்லி என 8 ரயில்கள் இயங்குகின்றன.
தமிழகத்தைப் பொருத்த வரை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, சென்னைக்கு 2 நாள்கள் மட்டுமே ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. ஏற்கெனவே முன்பதிவு நிறைவடைந்ததன் காரணமாகவே சென்னைக்கு இந்த 2 நாள்கள் ரயில் இயக்கப்படுவதாகவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.