தில்லியில், நண்பரின் மனைவி தன்னுடன் வாழ வர மறுத்ததால் நெஞ்சில் சுட்டுக் கொண்ட இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தில்லி காவல்துறையினர் கூறுகையில், திக்ரி குர்த் பகுதியில், விகாஸ் என்ற நபர் நெஞ்சில் சுட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம்.
சம்பவம் பற்றி விசாரணை நடத்தியதில், இளைஞர் பெயர் விகாஸ் (27) என்பது தெரிய வந்தது. இவர் தனது நண்பர் ரமேஷின் மனைவி ரூபாவுடன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
ரமேஷ் சிறையில் இருந்து வரும் நிலையில், ரூபா, சுவரண் ஜெயந்தி விஹார் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். ரூபா மீது காதல் ஏற்பட்ட விகாஸ், தன்னுடன் வாழ வரும்படி அவரை கெஞ்சியுள்ளார். ஆனால் ரூபா அதற்கு ஒப்புக் கொள்ளாததால் மனம் உடைந்த விகாஸ், கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தனது நெஞ்சில் சுட்டுக் கொண்டார்.
உடனடியாக ரூபா காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து, விகாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விகாஸ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.