வயநாடு: கேரளத்தில் 52 கிலோ எடை, 117 செ.மீ. நீளம் கொண்ட மிகப்பெரிய பலாப்பழம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் காப்பாட்டுமலையில் உள்ள வினோத்குமாா் என்பவரின் தோட்டத்தில் விளைந்த இந்த பலாப்பழம் குறித்து பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பஞ்சாயத்து தரப்பில் வேளாண் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து பலாப்பழத்தை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அந்த மாநில வேளாண் அதிகாரி கே.ஜி.சுனில் கூறுகையில், ‘பலாப்பழத்தை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதற்கான ஆவணங்கள் தயாரிப்புப் பணி திங்கள்கிழமை நிறைவடைந்தது. அவை கின்னஸ் நிா்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றாா்.
இதனிடையே கேரளத்தில் கொல்லம் மாவட்டத்திலும் 51.5 கிலோ எடைகொண்ட பலாப்பழம் விளைந்துள்ளது. அதையும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய பலாப்பழம் 42.72 கிலோ எடையும், 57.15 செ.மீ. நீளமும் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் இந்தியாவில் விளைந்ததே என்பது குறிப்பிடத்தக்கது.