புது தில்லி: தில்லியில் தற்போது கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்து விட்ட நிலையில், கரோனா நோயாளிகள் மற்றும் கரோனா பாதித்து மரணம் அடைந்தவர்களைக் கையாள்வது தொடர்பாக சில புதிய கொள்கை முடிவுகளை தில்லி அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக அறிவிப்பில், இனி கரோனா உறுதி செய்யாமல் மரணமடையும் நோயாளிகளுக்கு கரோனா சோதனை செய்யப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இனி இறந்த உடல்களுக்கு கரோனா சோதனை செய்யப்பட வேண்டாம் என்பதே.
கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட கொள்கை அறிவிப்பை தில்லி அரசு தற்போது மாற்றியுள்ளது. அதில், இறந்த உடல்களில் இருந்து கரோனா பரிசோதனைக்கு மாதிரிகளை எடுக்க வேண்டாம். கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு கரோனா இருப்பதற்கான வாய்ப்பு இருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதும்பட்சத்தில் கரோனா சந்தேக மரணமாகவே அதனைக் கருதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.