கரோனாவுக்கு மத்தியில் வாழ கற்றுக் கொள்வது அவசியம்: வெங்கய்ய நாயுடு


புது தில்லி: கரோனாவுக்கு மத்தியில் வாழ மக்கள் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

மேலும், இப்போது கிடைத்த படிப்பினைகளின் அடிப்படையில் புதிய வழிமுறைகளை வாழ்வின் அங்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக முகநூலில் வெங்கய்ய நாயுடு திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: நாம் தனிமையிலேயே வாழ முடியாது என்பதையும், மனிதர்களுக்கு இடையேயான தொடர்புகளின் முக்கியத்துவத்தையும் கரோனா நோய்த்தொற்று உணர்த்தியுள்ளது.

கரோனாவுக்கு முந்தைய காலத்தில், பொருளையும் மகிழ்ச்சியையும் தேடி மக்கள் ஓடிக் கொண்டிருந்தனர். இதனால், குடும்பமாக நேரத்தை செலவிடுவது குறைவாக இருந்தது. சமூகத்துடனும் பிணைப்பு இல்லாமல் இருந்தனர். மற்றவர்களின் வாழ்க்கை குறித்து கவலைப்படாமல் இருப்பதும், தங்களால் தனித்து வாழ முடியும் என்ற கர்வமும் மேலோங்கி இருந்தன.


ஆனால், கரோனாவுக்கு பிறகு வாழ்வின் அடிப்படைகளே மாறியுள்ளன. இயற்கையுடனும், சக மனிதர்களுடனும் இணக்கமாக வாழ வேண்டியதன் அவசியத்தை கரோனா சூழல் உணர்த்தியுள்ளது. மனிதர்களின் வாழ்க்கை வெகு எளிதாக மாற்றமடையும் என்பதை கண்ணுக்கு புலப்படாத நோய்க்கிருமி நிரூபித்துள்ளது என்று தனது பதிவில் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com