புது தில்லி: தலைநகர் தில்லியில் திங்கள்கிழமை காற்றின் தரம் கடும் பின்னடைவைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, சில இடங்களில் காற்றின் தரக் குறியீடு "மிதமான' பிரிவிலும், சில இடங்களில் "மோசம்' பிரிவிலும் இருந்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 42.3 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது.
வெப்பநிலை 40.7 டிகிரி: கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால், புழுக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி குறைந்து 23.1 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயர்ந்து 40.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 47 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 16 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.
பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 23.6 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 42.3 டிகிரி செல்சியஸ் எனவும் ஆயாநகரில் முறையே 23.8 டிகிரி செல்சியஸ், 41.8 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 49 சதவீதம், மாலையில் 11 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 34 சதவீதம் மற்றும் 15 சதவீதம் எனவும் இருந்தது.
காற்றின் தரம்: மேற்கு திசையிலிருந்து தில்லிக்கு சுமார் 15 கி.மீ. வேகத்தில் தரை மேற்பரப்பு காற்று வீசியது. வானமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், காற்றின் தரத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. இதனால், காற்றின் தரம் சில இடங்களில் "மிதமான' பிரிவிலும், சில இடங்களில் "மோசம்' பிரிவிலும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை 171 புள்ளிகளாக (மிதமான பிரிவு) பதிவாகியிருந்த ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு, திங்கள்கிழமை மேலும் உயர்ந்து 186 புள்ளிகளாகப் பதிவாகியது. சாந்தினி செüக், ஆயா நகர், நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரம் "மோசம்' பிரிவில் இருந்தது. திர்பூர், விமான நிலைய டெர்மினல் 3 பகுதி, தில்லி பல்கலைக்கழகம், பூசா, லோதி ரோடு, குருகிராம், உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரம் "மிதமான' பிரிவிலும்
இருந்தது.