இந்தியாவில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதம் 39.62% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
உலக அளவில் ஒரு லட்சத்துக்கு 62 பேர் என்ற விகிதத்தில் கரோனா பாதிப்பு உள்ளது. அதுவே, இந்தியாவில் ஒரு லட்சத்துக்கு 7.9 பேர் என்ற விகிதத்தில் கரோனா பரவி வருகிறது. அதேநேரத்தில் சுமார் 39.62% பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையில் 2.94% பேர் செயற்கை சுவாசக் கருவி உதவியுடனும், 3% பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 0.45% பேர் வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, உலக அளவில் இறப்பு விகிதம் ஒரு லட்சத்துக்கு 4.2 பேர் என்ற நிலையில், இந்தியாவில் அது 0.2 என உள்ளது.
தொடர்ந்து கரோனா மீட்பு விகிதம் அதிகரித்து வருகிறது. முதல் கட்ட ஊரடங்கின்போது 7.1% ஆக இருந்த மீட்பு விகிதம் இரண்டாம் கட்ட ஊரடங்கின்போது 11.42% ஆகவும், தொடர்ந்து 26.59% ஆகவும் தற்போது 39.62% ஆகவும் அதிகரித்துள்ளது. சிகிச்சை முறையில் இது திருப்தி அளிப்பதாக உள்ளது' என்று தெரிவித்தார்.
முன்னதாக, நாட்டில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை புதன்கிழமை 1,06,750 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,303 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.