குஜராத் மாநிலத்தில் ஆமதாபாத் மருத்துவமனையில்தான் இதுவரையில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாம் இடத்திலும், பலி எண்ணிக்கையில் இரண்டாம் இடத்திலும் குஜராத் உள்ளது.
இன்று காலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, குஜராத் மாநிலத்தில் இதுவரை 12,537 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 749 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 5,219 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், குஜராத்தில் கரோனா பலி எண்ணிக்கையில் 50% உயிரிழப்புகள் ஒரே மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளன.
மொத்தம் 749 பேர் உயிரிழந்த நிலையில், இதில் 351 பேர் அஸ்வரா பகுதியில் உள்ள ஆமதாபாத் சிவில் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ஆமதாபாத் சிவில் மருத்துவமனை, ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும். இங்கு கரோனா சிகிச்சைக்கு என 1,200 சிறப்பு படுக்கைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், எஸ்.வி.பி. மருத்துவமனையில் 120 பேரும், சோலா சிவில் மருத்துவமனையில் 29 பேரும் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.