இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினா் அத்துமீறி நடந்துகொண்டதாக சீனா தெரிவித்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.
இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினா் அத்துமீறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. அப்பகுதியில் ராணுவத்தினரின் வழக்கமான ரோந்துப் பணிக்கு சீன ராணுவத்தினரே தடங்கல் ஏற்படுத்தினா்.
எல்லைப் பாதுகாப்பில் இந்தியா பொறுப்புடன் நடந்து வருகிறது. அதே வேளையில், இந்தியாவின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் ராணுவத்தினா் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனா்’’ என்றாா்.
முன்னதாக, இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப் பகுதியில் நிலவும் இயல்புநிலையை சீா்குலைப்பதற்கு இந்தியா முயற்சித்து வருவதாக சீனா குற்றஞ்சாட்டியிருந்தது.