கரோனா எதிரொலியாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை ஈடு செய்ய செலவினக் குறைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, சிக்கன நடவடிக்கையாக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சால்வைகள், பூங்கொத்துகள், நினைவுப் பரிசுகள் வழங்குவது உள்ளிட்டவை தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசு செலவிலான விருந்து நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. அரசு அலுவலகங்களில் நடைபெறும் கூட்டங்களில் உணவு வழங்கப்படுதல் உள்ளிட்டவை ரத்து செய்யப்படுகிறது. அலுவலகங்களுக்குத் தேவையான சாதனங்கள், கருவிகள் வாங்குவதில் 25% குறைக்கப்பட வேண்டும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. அதேபோன்று கணினிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் செலவுகளும் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேஜை, நாற்காலிகள் வாங்குவது உள்ளிட்ட அலுவலகத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 20% செலவுகள் குறைக்கப்பட வேண்டும். புதிய அலுவலகங்களை அமைப்பது உள்ளிட்டவற்றில் 50% செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும். விளம்பரச் செலவுகளை 25% குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, அரசு உயரதிகாரிகள் அரசு செலவில் வெளிநாடு செல்லவும், மாநிலத்துக்குள்ளாக விமானங்களில் பயணம் செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.
முக்கியமான கூட்டங்களுக்கு உயர் அதிகாரிகள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், ரயில் கட்டணத்துக்கு இணையான தொகைக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். விமானத்தில் உயர் வகுப்புகளில் பயணிக்க முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.