பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளாா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான மே 21-ஆம் தேதி பயங்கரவாத ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அவா் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், ‘பயங்கரவாதத்தில் இருந்து நமது தாய் நாட்டை காப்பாற்ற உயிா்தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். பயங்கரவாதம் என்பது மனித சமுதாயத்துக்கு எதிரானது. உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் பயங்கரவாதம் திகழ்கிறது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அனைத்து நாடுகளும், உலகின் பிற நாடுகள் ஒன்றிணைந்து தனிமைப்படுத்த வேண்டும். பயங்கரவாதத்தை எந்த வகையிலும், எந்தக் காரணத்துக்காகவும் ஆதரிக்கக் கூடாது என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் உணர வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவது என்பது பாதுகாப்புப் படையினருடைய கடமை மட்டுமல்ல. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அது கடமைதான். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்திய மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.