தில்லியில் மேலும் 5 சிஆர்பிஎஃப் காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4ஆவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி நாட்டில் கரோனா பாதிப்பு 1,18,447 ஆக உள்ளது. இவற்றில் 66,330 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை இந்த நோய்க்கு 3,583 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 148 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தில்லியில் மேலும் 5 சிஆர்பிஎஃப் காவலர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி தில்லியில் 340 சிஆர்பிஎஃப் காவலர்கள் அந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
213 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர் என சிஆர்பிஎஃப் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.