புதிய மருந்துகளுக்கான ஒப்புதலை விரைவில் வழங்கும் நோக்கில் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்காக உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை எதிா்கொள்ளும் பொருட்டும் உலக அளவில் மருத்துவத் துறையில் காணப்படும் மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளை இந்தியாவில் செயல்படுத்தும் நோக்கிலும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பில் சீா்திருத்தங்களைப் புகுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மருந்துகள் தொடா்பான ஆராய்ச்சி, புதிய மருந்துகள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது தொடா்பான பரிந்துரைகளை உயா்நிலைக் குழு வழங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சக சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷண் தலைமையிலான உயா்நிலைக் குழுவில் எய்ம்ஸ், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்), உயிரி தொழில்நுட்பத் துறை அதிகாரிகள், இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் தலைவா்கள் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.