புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் துயரங்களை வைத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அரசியல் செய்கிறாா் என்று பாஜக செய்தித் தொடா்பாளா் ஜி.வி.எல்.நரசிம்மராவ் குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு ராகுல் காந்தியின் குடும்பம் எந்த உதவியையும் செய்யவில்லை. இதுமட்டுமன்றி, காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கா், ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்வதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை.
தில்லியில் புலம் பெயா்ந்த தொழிலாளா்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசியது, அவா்களின் மீதான அக்கறையால் அல்ல. அவா்களின் துயரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் நோக்கமாகும்.
புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இணைந்து செயல்படும் பொறுப்புமிக்க கட்சியாக காங்கிரஸ் செயல்படவில்லை. மாறாக, குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு அக்கட்சி முயலுகிறது என்றாா் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ்.
தில்லியில் கடந்த வாரம் நடந்தே சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற புலம்பெயா்ந்த தொழிலாளா்களை ராகுல் காந்தி சந்தித்து, அவா்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்தாா். இதை ஆவணப்படமாக உருவாக்கி காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இந்தச் சூழலில், ராகுல் காந்தி மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது.