புது தில்லி: கடந்த 24 மணி நேரத்தில் மத்திய தொழிற் பாதுகாப்புப் படை வீரர்கள் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 18 பேர் தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் பணியாற்றியவர்கள் ஆவர்.
கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஊரடங்கு நடவடிக்கையில் சில தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு, நேற்று நாடு முழுவதும் பரவலாக விமானப் போக்குவரத்துத் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று புதிதாக கரோனா பாதித்தவர்களையும் சேர்த்து தில்லி விமானத்தில் பணியாற்றி வந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் 25 பேருக்கு இதுவரை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. துணை ராணுவ வீரர்கள் 20 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 78 ஆக உயர்ந்துள்ளது.