திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தொழிற்கல்வி பிரிவுக்கான பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன.
தேர்வு மையங்களுக்குள் நுழைவதற்கு முன்பு மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு கை சுத்தத் திரவம் வழங்கப்பட்டன. மேலும், தேர்வு மையங்களுக்குச் செல்ல மாணாக்கர்களுக்கு வசதியாக வழிகாட்டுதல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தது.
4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் மாநிலத்தில் பல்வேறு தேர்வுகள் மே 30 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் மே 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகின்றன.
12-ம் வகுப்புத் தேர்வுகள் மே 27 முதல் 30 வரையிலும், தொழிற்கல்வி பிரிவுக்கான தேர்வுகள் மே 26 முதல் 30 வரையிலும் நடத்தப்படும் என்று பொதுக் கல்வி இயக்குநர் கே.ஜீவன்பாபு தெரிவித்தார். தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு கல்வித்துறை இலவச முகக் கவசம் வழங்கியது.
கேரளாவில் உள்ள 20 மையங்களில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையில் இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களைத் திறப்பதற்கான தடை அரசாங்கத்தால் ரத்து செய்யப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மார்ச் மாதம் முதல் இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.