மத்தியப் பிரதேசத்தில் திருமண விழாவில் கலந்துகொண்ட ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து புதுமணத் தம்பதிகள் உள்பட 95 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிந்த்வாரா பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் தில்லியில் இருந்து வந்த ஒருவர் கலந்து கொண்டுள்ளார். அவருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மணமக்கள் உள்பட திருமணத்தில் கலந்துகொண்ட 95 பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் ஷாஹி கூறுகையில், 'திருமணங்கள் போன்ற விழாக்கள் நடைபெற கட்டுப்பாட்டு விதிமுறைகள் உள்ளன. அதன்படியே நடைபெற வேண்டும்.
இந்த சம்பவத்தினை அடுத்து திருமணங்கள் போன்ற விழாக்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மேம்படுத்தியுள்ளோம். இப்பகுதியில் வேறு யாரும் நுழைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு கரோனா வைரஸ் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
திருமணத்தில் கலந்துகொண்டவர் தில்லியில் இருந்து வந்ததாக கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார்.