புலம்பெயர் தொழிலாளர்களிடம் பயணக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பொது முடக்க காலத்தில், பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் சாலை மார்க்கமாக நடந்தே சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.
இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல துரிதமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், சம்பந்தப்பட்ட மாநிலங்களே புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குடிநீர், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும், புலம்பெயர் தொழிலாளர்களிடம் பயணக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது, மாநில அரசுகளே அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
வழக்கு விவரம்:
பொது முடக்க காலத்தில் பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால் சாலை மாா்க்கமாக நடந்தும், மிதிவண்டிகளிலும் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர். இதுதொடர்பாக பத்திரிகைகள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இதைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 2 நாள்களில் பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.