இண்டிகோ விமானத்தில் பெங்களுருவில் இருந்து மதுரை வந்த பயணி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.
மே 27 ஆம் தேதி பெங்களுருவில் இருந்து மதுரைக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. இதில், பயணித்த ஒருவருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி ஆகியுள்ளது. அவர் மதுரையில் உள்ள அரசு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் அதில் பயணித்த ஊழியர்கள் மற்றும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் முயற்சியிலும் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஊரடங்கு காரணமாக கடந்த இரு மாதங்களாக விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததையடுத்து, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.