கேரளத்தில் இதுவரை சமூகப் பரவல் இல்லை என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிம் பேசிய அவர் கூறியதாவது:
கடந்த மே 7 அன்று, மாநிலத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.
ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு விமானம், ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, பல மாநிலங்களில் இருந்து கேரளத்திற்கு தொழிலாளர்கள் வருகின்றனர். அவர்களில் பலருக்கு கரோனா தொற்று இருக்கிறது.
எனினும் கேரளத்தில் கரோனாவின் முதல் கட்டத்தில் 30% ஆக இருந்த பாதிப்பு இரண்டாவது கட்டத்தில் பாதிப்பு 15% ஆக குறைந்து விட்டது. இதில் தொடர்புகள் மூலமாக ஏற்படும் பாதிப்புகள் குறைந்துள்ளன.
கரோனா தொற்று காரணமாக பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ஒருவர் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். மே 11 அன்று அவர் வளைகுடா நாட்டில் இருந்து வந்தவர். ஏற்கெனவே கடுமையான நீரிழிவு மற்றும் உடல் பருமனால் அவதிப்பட்டார். வென்டிலேட்டர் மூலமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுவரை மாநிலத்தில் சமூகப் பரவல் இல்லை. எங்களது மருத்துவக்குழு மற்றும் அரசு அதிகாரிகள் கரோனா பரவல் தொடர்புகளை கண்டறிவதில் திறமையாக செயல்படுகின்றனர். பாதிக்கு ஏற்பட்டோரின் அனைத்து தொடர்புகளையும் கண்டறிகின்றனர்' என்று தெரிவித்தார்.
கேரளத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கரோனா பாதிப்பு 1,088 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆகவும் உள்ளது.