கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை நவம்பர் 5 முதல் திறக்க மகாராஷ்டிர மாநில அரசு ஒப்புதல் அளித்து புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா தீநுண்மித் தொற்று பரவலைத் தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக, மாா்ச் 25-ஆம் தேதி முதல் மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. இந்நிலையில், திரையரங்குகளை அக். 15-ஆம் தேதி முதல் திறக்க மத்திய அரசு தனது ஐந்தாவது பொது முடக்கத் தளா்வில் அனுமதி அளித்திருந்தது. எனினும் மகாராஷ்டிரத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வந்ததால் திரையரங்குகளைத் திறக்க மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் நவம்பர் 5ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க மாநில அரசு அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக் கவசங்களை அணிவதை உறுதி செய்வது,கிருமி நாசினிகளை வைத்திருப்பது, திரையரங்குகளில் நுழைவதற்கு முன் அனைவருக்கு உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொள்வதை ஆகியவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுழைவுச் சீட்டுகளுக்கான கட்டணம், திரையரங்குகளில் இருக்கும் சிற்றுண்டிகளில் செலுத்த வேண்டிய கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.