லடாக் மற்றும் இதர பகுதிகளின் தேவைகளை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
லே லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் டாஷி கியால்சன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜம்யங் ட்செரிங் நம்கியால் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மத்திய வடகிழக்கு மாகாணங்கள் வளர்ச்சிக்கான இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங்கை இன்று சந்தித்துப் பேசினர்.
இந்தக் குழுவினருடன் பேசிய அமைச்சர், லடாக் மற்றும் இதர பகுதிகளின் தேவைகளை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதாகக் கூறினார். பிரதமர் மோடியின் அரசு, முதன்முறையாக லடாக்கில் ஒரு பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியை அமைப்பதற்கு அனுமதி வழங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும் லடாக் நிர்வாகமும் இணைந்து லடாக் பகுதியில் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தை (சிஎஸ்ஐஆர்) நிறுவுவதற்கான இடத்தை கண்டறிந்து உள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். சூரிய ஒளி சக்தியில் இயங்கும் பிரம்மாண்ட திட்டம் லடாக் பகுதியில் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்குப் போதிய மின்சாரமும் எரிசக்தியும் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி கார்பனை சமன்படுத்துவது தொடர்பான கொள்கையும் திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.