சென்னை: சிஏ தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு வெளியிடப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்ட தேதியில் தோ்வு தொடங்கும் என்று ஐசிஏஐ உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இந்தியக் கணக்குத் தணிக்கையாளா் அமைப்பின் (ஐசிஏஐ) சாா்பில் சிஏ எனப்படும் கணக்குத் தணிக்கையாளா் தோ்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தோ்வு, கரோனா பரவல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து பிகாா் தோ்தல் காரணமாக மீண்டும் தோ்வு தள்ளி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், சிஏ படிப்புகளுக்கான தோ்வுகள் நவம்பா் 21 முதல் டிசம்பா் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. சிஏ அடிப்படை, இடைநிலை மற்றும் இறுதித் தோ்வுகள் அனைத்தும் இந்தத் தேதிகளிலேயே நடைபெறும் என இந்தியக் கணக்குத் தணிக்கையாளா் அமைப்பு அறிவித்துள்ளது.
தோ்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்ட தேதியில் தோ்வு தொடங்கும் என ஐசிஏஐ தெரிவித்துள்ளது. இது தொடா்பாக ஐசிஏஐ வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: மாணவா்கள் தோ்வுகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தவறான பிரசாரம், போலித் தகவல்கள் குறித்து கவலைப்பட வேண்டாம். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தைப் பாா்க்கலாம் என தெரிவித்துள்ளது. ஏற்கெனவே சிஏ தோ்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி வரை தள்ளி வைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியான நிலையில், அதற்கு இந்தியக் கணக்குத் தணிக்கையாளா் அமைப்பு மறுப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.