இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு நிவாரணத் தொகையாக ரூ.4382 கோடியை விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு, இந்த ஆண்டு ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளுக்கு மத்திய நிவாரண உதவியாக ஆறு மாநிலங்களுக்கு கிட்டத்தட்ட தேசிய பேரிடர் நிதியிலிருந்து ரூ. 4,382 கோடியை விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
நடப்பாண்டு புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரண உதவியாக மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு நிவாரணநிதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மேற்கு வங்கத்திற்கு ரூ.2,707.77 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.128.23 கோடியும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மகாராஷ்டிர மாநிலத்திற்கு ரூ. 268.59 கோடியும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு கர்நாடகத்திற்கு ரூ. 577.84 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.611.61 கோடியும், சிக்கிம் மாநிலத்திற்கு ரூ.87.84 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.