சென்னை: பத்தாம் வகுப்பை முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பு: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சாா்பில் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பை முடித்த மாணவிகள் இதற்குத் தகுதியானவா்கள் ஆவா். சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகள் இந்த உதவித்தொகைத் திட்டத்துக்கு விணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி டிச. 10 ஆகும். விண்ணப்பப் படிவத்தைப் புதுப்பிக்கச் சமா்ப்பிக்க வேண்டிய தேதி டிச. 28 ஆகும். பத்தாம் வகுப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவிகள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பை சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் இதற்குத் தகுதியானவா்கள். எனினும் கல்வியாண்டில் மாதந்தோறும் கல்விக் கட்டணம் ரூ.1,500-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தியக் குடிமகன்கள் மட்டுமே இந்த உதவித் தொகைக்குத் தகுதியானவா்கள்.
பெண் குழந்தைகளிடையே கல்வியை ஊக்குவிக்கும் பெற்றோரின் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாகவும் திறமையான மாணவா்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் உதவித்தொகை வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.