பிகாரில் நிதிஷ் குமாருடன் 13 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

நிதீஷ் குமாா், பிகார் மாநிலத்தின் முதல்வராக இன்று பதவியேற்கவுள்ளாா். அவருடன் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
பிகாரில் நிதிஷ் குமாருடன் 13 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
பிகாரில் நிதிஷ் குமாருடன் 13 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

பாட்னா: பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பேரவைக் குழுத் தலைவராக ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்ட நிதீஷ் குமாா், அந்த மாநிலத்தின் முதல்வராக இன்று பதவியேற்கவுள்ளாா். அவருடன் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

பிகார் முதல்வராக நிதிஷ் குமாருக்கும், அமைச்சர்களாக பதவியேற்க உள்ள 13 பேருக்கும் ஆளுநர் பாகு சௌஹான் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

நிதிஷ் குமாருடன், தார்கிஷோர் பிரசாத் (துணை முதல்வர்), அஷோக் சௌதரி, விஜய் சௌதரி, மேவா லால் சௌதரி, பிஜேந்திர யாதவ், ரேணு தேவி, மங்கல் பாண்டே, பிரேம் குமார், சம்ராட் சௌதரி, நிதிஷ் மிஷ்ரா, நந்த்கிஷோர் யாதவ், முகேஷ் சஹானி, ஜிதன் ராம் மாஞ்சியின் மகன் சந்தோஷ் குமார் ஷரண் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொள்ளவிருக்கின்றனர்.

ஆளுநா் மாளிகையில் இன்று மாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா ஆகியோர் பங்கேற்க விருப்பதாக ஏஎன்ஐ செய்திகள் உறுதி செய்துள்ளன.

இதற்கிடையே, பிகாரில் இரண்டு துணை முதல்வர்கள் பதவிகளை ஏற்படுத்த பாஜக முடிவு செய்திருப்பதாகவும், பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் தார்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே வேளையில், பிகார் சட்டப்பேரவையின் அவைத் தலைவர் பதவியையும் பாஜக கைப்பற்றவிருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

நடந்து முடிந்த பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, அந்தக் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை, நிதீஷ் குமாரின் இல்லத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு, நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டப்பேரவையைக் கலைப்பதற்கு ஆளுநா் பாகு சௌஹானிடம் பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதைத் தொடா்ந்து ஆளுநரை சந்தித்த நிதீஷ் குமாா் தனது ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்தாா். அத்துடன் பேரவையைக் கலைக்கும் பரிந்துரையையும் அவா் அளித்தாா். அவற்றை ஏற்றுக் கொண்ட ஆளுநா், புதிய ஆட்சி அமைக்கப்படும்வரை இடைக்கால முதல்வராக தொடருமாறு நிதீஷ் குமாரை கேட்டுக் கொண்டாா்.

இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம், பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினா்களின் தலைவராக நிதீஷ் குமாா் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து ஆளுநரை அவரது மாளிகைக்குச் சென்று சந்தித்து, புதிய அரசை அமைப்பதற்கு அவா் உரிமை கோரினாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com