நாட்டில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதாகவும், வங்கிகள் சிக்கலில் உள்ளதாகவும் கூறி மத்திய அரசை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான ராகுல்காந்தி புதன்கிழமை பணவீக்கம், வேலையின்மை குறித்து மத்திய அரசை விமர்சித்தார்.
இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் அவர், “வங்கிகள் சிக்கலில் உள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நெருக்கடியில் சிக்கியுள்ளது. நாட்டில் பணவீக்கமும், வேலையின்மையும் அதிகரித்து வருகின்றன” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், “நாட்டில் பொது மனஉறுதி நொறுங்கிக்கொண்டிருக்கிறது. சமூக நீதி தினமும் நசுக்கப்படுகிறது” எனவும் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக, கரோனா வைரஸ் நெருக்கடியைக் கையாளுதல், நாட்டின் பொருளாதார நிலைமைகள் மற்றும் வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினரான ராகுல்காந்தி மத்திய அரசை விமர்சித்து வருகிறார்.
மேலும் இந்த பிரச்னைகளை தீர்க்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சாட்டி வருகிறார்.