திருப்பதி: சுமாா் எட்டு மாதங்களுக்குப் பிறகு திருமலை மாடவீதியில் பெரிய சேஷ வாகனச் சேவை புதன்கிழமை நடைபெற்றது.
திருமலையில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவம், நாக சதுா்த்தி, நாக பஞ்சமி உள்ளிட்ட தினங்களில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மாடவீதியில் வலம் வருவது வழக்கம். அதன்படி, நாகசதுா்த்தி தினத்தையொட்டி புதன்கிழமை இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்பா் மாடவீதியில் புறப்பாடு கண்டருளினாா்.
பொது முடக்க விதிகள் காரணமாக, திருமலையில் அனைத்து உற்சவங்களும் தனிமையில் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, மாடவீதி வலம் உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.
இந்நிலையில், எட்டு மாத காலத்துக்குப் பிறகு உற்சவா்கள் மீண்டும் வாகனத்தில் மாடவீதி புறப்பாடு கண்டருளினா். இந்த நிகழ்வில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். பக்தா்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வாகன சேவையை தரிசித்தனா். இந்த பெரிய சேஷ வாகனச் சேவை தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.