தில்லி அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்படும்: கேஜரிவால்

தில்லி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால்


தில்லி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், கிழக்கு தில்லியிலுள்ள ஜி.டி.பி. மருத்துவமனையை, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜரிவால், ''தில்லியில் கரோனா தொற்று பரவி வருவதால், அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். வெவ்வேறு பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 660 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் அமைக்கப்படும். 

ஜி.டி.பி. மருத்துவமனை மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டோம். அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்காக அடுத்த இரண்டு நாள்களில் கூடுதலாக 238 படுக்கைகளை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளனர். கரோனா பரவலால் ஏற்படும் நெருக்கடியை மருத்துவர்கள் சிறப்பாக கையாண்டு வருகின்றனர்.'' என்று கூறினார்.

தில்லியில் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி முதல் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக கரோனா தொற்று பதிவாகி வருகிறது. நவம்பர் 11-ஆம் தேதி 8 ஆயிரத்திற்கும் அதிகமாக கரோனா தொற்று பதிவாகியது. 

நேற்றைய (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி தில்லியில் 6,396 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.95 லட்சத்தைக் கடந்துள்ளது.

புதிதாக 99 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பலியானதால், மொத்தமாக தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 7,812-ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com