புது தில்லி: கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும், மருத்துவ ஊழியர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹர்ஷ் வர்தன், இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தியாவில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து விடும். பயன்பாட்டுக்கு வந்ததும் முதற்கட்டமாக 23 - 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
தடுப்பூசியை போடும்போது, சிலப் பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதில், மருத்துவத் துறையில் பணியாற்றும் முன்கள வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அவர்களைத் தொட்ர்ந்து 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், அதன்பிறகு 50 - 65 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடப்படும், பிறகுதான் 50 வயதுக்குடையவர்கள் மற்றும் இதர நோய்கள் இருப்பவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த பெருந்தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கையை அவ்வப்போது சோப்பு போட்டு கழுவுதல் போன்றவற்றின் மூலம் தற்காத்துக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் கூறினார்.