மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளை அந்தந்த மாநில பிராந்திய மொழிகளில் நடத்த வேண்டும் எனக்கோரி பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே, பாதுகாப்பு சேவைகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள பணியிடங்களுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே நடைபெறுகின்றன.
இந்நிலையில் மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் அவர், “இந்தியாவின் அனைத்து மாநில மாணவர்களுக்கும் சமமான மற்றும் நியாயமான வாய்ப்புகளை வழங்குவதற்காக, இந்திய அரசு மற்றும் அதன் துறைகள், யுபிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றுவதற்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளை பிராந்திய மொழிகளில் எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.