பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, கட்சியைப் பலப்படுத்த டிசம்பர் மாதம் தொடங்கி நாடு முழுவதும் 120 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதுபற்றி பாஜக பொதுச்செயலர் அருண் சிங் தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"பாஜக தேசியத் தலைவர் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வாக்குச் சாவடி தலைவர்கள், கட்சியின் சிறிய அமைப்புக் குழுத் தலைவர்கள் உள்ளிட்டோருடன் காணொலி வாயிலாக கூட்டம் நடத்துகிறார். ஒவ்வொரு மாநிலத் தலைவர்கள், மூத்த தலைவர்கள், அனைத்து எம்எல்ஏ, எம்பி-க்களையும் சந்திக்கவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறாத இடங்களில் அமைப்பை வலுப்படுத்தும் வகையில் கட்சித் தலைவர்களுடன் வியூகம் வகுக்கவுள்ளார். மேற்கு வங்கம், கேரளம், தமிழகம் மற்றும் அசாமில் பேரவைத் தேர்தல்கள் வரவுள்ள நிலையில், தேர்தலுக்கான தயார் நிலை குறித்து ஆய்வு செய்யவுள்ளார்.
இந்தப் பயணம் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்குகிறது. முதல் மாநிலமாக உத்தரகண்ட் பயணிக்கிறார்."