கேரளத்தில் காவலர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் போலீஸ் அவசர சட்டத் திருத்தத்தால், ஊடக சுதந்திரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என்று முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார்.
கேரளத்தில் காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் போலீஸ் சட்டத்தில் கேரள அரசு திருத்தம் கொண்டுவந்தது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான, 'சைபர்' தாக்குதல்களைத் தடுக்கும் வகையில், காவலர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் போலீஸ் சட்டத் திருத்தத்திற்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் தனிநபர் குறித்து சமூக வலைதளத்தில் தவறான கருத்துகளைப் பதிவிட்டாலோ, பரப்பினாலோ ரூ.10 ஆயிரம் அபராதமும், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதலளித்துள்ள நிலையில், பத்திரிகை சுதந்திரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ''கேரள போலீஸ் அவசரச் சட்டத்தால் ஊடக செயல்பாடுகளுக்கும், பேச்சு சுதந்திரத்திற்கும் எந்தவித இடையூறும் ஏற்படாது.
சட்டம் மற்றும் ஜனநாயகத்திற்குட்பட்ட வரம்புக்குள் யாரும் யாரைவேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஜனநாயத்தால் வழங்கப்பட்டுள்ள பத்திரிகைத் துறையின் தனித்துவமான சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கு அரசு பொறுப்பு'' என்று கூறினார்.